காலி - கொழும்பு பிரதான வீதியில் பாயாகல, கட்டுக்குருந்த பிரதேசத்தில் நேற்று (01) நள்ளிரவு 12 மணியளவில் தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. பாயாகல பொலிஸாரால் விசாரிக்கப்படும் இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் அவரது பேரன் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் களுத்துறை, துவே பன்சல வீதிப் பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும், 12 வயதுடைய ஆண் குழந்தையும் ஆவர். அவர்கள் பேருவளைப் பிரதேசத்தில் நடைபெற்ற பொசொன் சடங்குகளைப் பார்க்கச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாட்டியும் பேரனும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து களுத்துறை கட்டுக்குருந்த பிரதான பேருந்து நிலையத்தில் நின்று மீண்டும் புறப்பட்டபோது, எதிரே வந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து பேருந்தின் முன்புறத்தில் மோதியுள்ளது. விபத்து நடந்தபோது முச்சக்கர வண்டியை ஓட்டியவர் உயிரிழந்த குழந்தையின் தாத்தா ஆவார், பலத்த காயமடைந்த அவரும் தற்போது களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றைய பெண்ணுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
இந்த பயங்கரமான விபத்து நடந்த விதம் பேருந்தின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், விபத்து நடந்த பின்னர் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, பேருந்தில் இருந்த ஒரு பயணி ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பையை திருடியுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த திருட்டு நடந்த விதமும் பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு சி.சி.டி.வி. (CCTV) கமெராக்களில் பதிவாகியுள்ளது.