தெற்கு லண்டனில் இரண்டு மசூதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது பாடசாலை மாணவர் ஒருவருக்கு எதிராக பயங்கரவாத குற்றங்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரி பயங்கரவாதத்துடன் (extreme right-wing terrorism) தொடர்புடைய இந்தச் சம்பவம், சந்தேகத்திற்குரிய குழந்தையின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டபோது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை 9ஆம் திகதி ஒரு வாகனத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த இளைஞர் முதலில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அவரது வீட்டை சோதனையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு அங்கு பல சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் உறுதிப்படுத்துகின்றனர். அதன்படி, முடிக்குரிய சட்டத்தரணி சேவை (Crown Prosecution Service) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், ஜூலை 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தயாரானமை மற்றும் ஜூன் 20ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சற்றன் (Sutton) பிரதேசத்தில் ஒரு மோட்டார் வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தி இனவாத அடிப்படையில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் திட்டத்தின் இலக்கு சற்றன் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மசூதிகள் ஆகும். சம்பந்தப்பட்ட மசூதிகளின் நிர்வாகம் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிபுணத்துவ அதிகாரிகளின் உதவியும் பாதுகாப்பும் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய வேறு எந்த சந்தேக நபர்களும் இதுவரை தேடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் தலைவர் ஹெலன் பிளானகன் அம்மையார், இவ்வளவு சிறிய குழந்தைக்கு எதிராக இத்தகைய கடுமையான பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது பொதுமக்களுக்கும், உள்ளூர் சமூகத்திற்கும் பெரும் கவலையை அளிக்கும் விடயம் என்று தெரிவித்தார். குறிப்பாக இது முஸ்லிம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுக்குக் கிடைக்கும் சம்பவங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஈடுபாடு கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், தெற்கு லண்டன் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் தலைவர் நிக் பிளாக்பர்ன், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நிகழும் இத்தகைய சம்பவங்களின் ஒட்டுமொத்த தாக்கத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று வலியுறுத்தினார். சமீபத்தில் சஃபோக் (Suffolk) பிரதேசத்தில் இஸ்லாமிய விழா ஒன்றிற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டதையும், லெய்டனில் (Leyton) ஒரு மசூதிக்கு அருகில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார்.
இந்த சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொலிஸ் ரோந்துப் பணிகள் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அவசரகால பூட்டுதல் பயிற்சிகளை (lockdown drills) நடத்துதல், பொலிஸாருடன் உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் சிசிடிவி (CCTV) கமரா அமைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக கடந்த மாதம் அந்நாட்டின் அனைத்து மசூதிகளுக்கும் புதிய தேசிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.