ஹோமாகம கட்டுவன தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசங்கள் (ஹெல்மெட்) தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் அங்கு கடமையாற்றிய ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற வேளையில் சுமார் எண்பது ஊழியர்கள் நிறுவனத்தினுள் தங்கியிருந்ததுடன், உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்ட பின்னர், கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் கடுமையாக எரிந்த நிலையில் காணப்பட்டதால், அவர்களின் அடையாளத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஹோமாகம வைத்தியசாலையின் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், அதிக புகை சுவாசிப்பு மற்றும் தீக்காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், தொழிற்சாலையில் இருந்த மின்விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் தொடங்கிய தீ, தலைக்கவசங்கள் தயாரிப்புக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த ரிஜிபோர்ம், தின்னர், இரசாயனப் பொருட்கள் மற்றும் கொட்டைகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் முழு கட்டிடத்திலும் பரவியுள்ளது.
தொழிற்பேட்டையில் உடனடி தீயணைப்புப் பிரிவு இல்லாததும் தீ வேகமாகப் பரவ மற்றொரு காரணமாக அமைந்தது. பின்னர், தெஹிவளை-கல்கிசை மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. இராணுவம், பொலிஸ், மின்சார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சுமார் ஐந்து மணி நேரம் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. தீயின் உக்கிரத்தினால் கட்டிடத்தின் மேல் மாடி இடிந்து விழுந்ததுடன், பல இயந்திரங்களுக்கும் பிரதேசத்தின் மின்சார கம்பிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
ஹோமாகம பதில் நீதவான் ரொஷான் குருப்புஆரச்சி சம்பவ இடத்தை பார்வையிட்டார். தீயினால் ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு இதுவரை மதிப்பிடப்படவில்லை. சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் தீயணைப்புப் பிரிவு நிபுணர்களும் ஹோமாகம பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.