அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக அரசாங்க நிதியுதவியின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட விதை மக்காச்சோளத்தை மோசடியாக தனது ஆதரவாளர்களுக்கு விநியோகித்த ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
முன்னாள் பொருளாதார பிரதி அமைச்சரும், விசேட திட்டங்கள் அமைச்சருமான அவருக்கு இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.குற்றவாளியான முன்னாள் அமைச்சரை ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டார்.
இந்த வழக்கு 2014 ஜனவரி 01 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் அனுராதபுரம் மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உட்பட அரச அதிகாரிகளைப் பயன்படுத்தி, அரசாங்க செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 36,000 கிலோ விதை மக்காச்சோளத்தை சட்டவிரோதமாக தனது ஆதரவாளர்களுக்கு விநியோகித்ததோடு தொடர்புடையது. இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, இலஞ்சச் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்தது.
இந்த ஊழல் செயல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடந்த ஆண்டு ஜூலை 04 ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி அவர் நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். இன்று மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு அடுத்த ஜூலை 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.