
பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் வகையில் அதிவேகமாகவும் அதிக சத்தத்துடனும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய பதினாறு பேர் ஹோமாகம தலைமையகப் பொலிஸாரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது, பொதுமக்களுக்கு இடையூறாக நடந்துகொள்ளும் ஒரு குழுவினர் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நபர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
அப்போது அவர்களிடம் இருந்த, அசல் வடிவத்தை முழுமையாக மாற்றி சட்டவிரோதமாக உதிரி பாகங்களை பொருத்தியிருந்த பதினாறு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். குறிப்பாக சைலன்சர்களின் ஒலி மாற்றப்பட்ட, பக்கக் கண்ணாடிகள் மற்றும் மண் மறைப்புகள் அகற்றப்பட்ட அத்துடன் சரியான முறையில் இலக்கத் தகடுகள் பொருத்தப்படாத மோட்டார் சைக்கிள்களும் இவற்றில் அடங்கும். மேலும், மோட்டார் சைக்கிளின் ஒளி வடிவங்களை மாற்றி ஆபத்தான பாகங்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் இவ்வாறு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்களில் ஐந்து பேருக்கு வாகனம் ஓட்டுவதற்கு செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பொலிஸ் காவலில் உள்ள இந்த சந்தேகநபர்கள் குழு எதிர்வரும் 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.