
சுற்றுலாப் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, பிரேசிலியர் ஒருவரைத் தடுத்து வைத்து, மூன்று மில்லியன் ரூபா கப்பம் கோரிய மூவரை உணுவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி, தல்பே பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த பிரேசிலிய சுற்றுலாப் பயணியின் அறைக்குச் சென்ற சந்தேகநபர்கள் இருவர், தாம் சுற்றுலாப் பொலிஸார் எனத் தெரிவித்து அறையைச் சோதனையிட்டுள்ளனர்.அப்போது அவர்கள் பாதிக்கப்பட்டவரின் பிரேசிலிய கடவுச்சீட்டு, அமெரிக்க ஆவணங்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சில தனிப்பட்ட பொருட்களைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், மற்றொரு சந்தேகநபர் இவர்களுடன் சேர்ந்துள்ளார். அதன்பின்னர், இந்த கும்பல் வெளிநாட்டவரை கைவிலங்கிட்டு அச்சுறுத்தியுள்ளது. கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கொழும்பில் உள்ள ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி சந்தேகநபர்கள் 3 மில்லியன் ரூபா பணத்தைக் கோரியுள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிள் ஒன்றை அடகு வைத்து தாம் ஏற்கனவே இரண்டு இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், எஞ்சிய 2.8 மில்லியன் ரூபா பணத்தை உடனடியாகச் செலுத்துமாறு பாதிக்கப்பட்டவரை வற்புறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட உணுவட்டுன சுற்றுலாப் பொலிஸ் அதிகாரிகள், விசேட நடவடிக்கையை மேற்கொண்டு 25 மற்றும் 26 வயதுடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். இந்த குற்றத்திற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய ஆல்டோ ரக கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.