முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர் மற்றும் மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஆகிய ஜகத் புஷ்பகுமார, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கடவர குளம் மற்றும் தெமலிய - வந்தம யானை வழித்தடத்தை அண்டிய அரச வன நிலங்களை சில பாரிய கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளித்த ஊழல் நடவடிக்கையுடன் நேரடியாக தொடர்புபட்டமையே அவர் இவ்வாறு கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாகும். வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த நில அபகரிப்பு காரணமாக அப்பகுதியில் பாரிய யானை - மனித மோதல் உருவாக வழிவகுத்துள்ளது.
சுமார் 120 காட்டு யானைகளின் வாழ்வுடன் தொடர்புடைய, உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தின் கீழ் யானை முகாமைத்துவ சரணாலயமாக அறிவிக்கப்படவிருந்த இந்த உணர்வுபூர்வமான சூழலியல் வலையத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கிரிந்தி ஓயாவின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் உள்ளடக்கிய இந்த வனப் பகுதிகளை அழித்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிலப் பரிமாற்றங்கள் மற்றும் அதற்கு உதவியமை மற்றும் தூண்டியமை ஆகிய காரணங்களுக்காக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.