ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நாடுகள் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட மனித உரிமைகள் அதிகாரங்களை (mandates) நிரந்தரமாகப் பேணுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வின் நிகழ்ச்சி நிரல் 2இன் கீழ் நடைபெற்ற பொது விவாதத்தில் செவ்வாய்க்கிழமை (8) கருத்துத் தெரிவித்த ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் சுமித் தசநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
தொடர்புடைய நாடுகள் முன்னேற்றத்தைக் காட்டும் போது, அந்த அதிகாரங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான வழிமுறைகளும், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மீளாய்வுகளும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.எந்தவொரு மனித உரிமைகள் அதிகாரத்தையும் காலவரையறையின்றிப் பேண முடியாது என்றும், நாடுகளுக்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் அளவிடக்கூடிய விளைவுகளின் அடிப்படையில் அவ்வப்போது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தூதுவர் தசநாயக்க வலியுறுத்தினார். பொருத்தமான சந்தர்ப்பங்களில், நாடுகள் தொடர்பான தீர்மானங்களில் காலாவதி விதிகள் (sunset clauses) மற்றும் கட்டம் கட்டமாக விலகுவதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய செயல்முறைகள், உரையாடல்கள், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி மூலம் முன்னேற்றத்தைக் காட்டும் நாடுகளுக்கு அத்தகைய அதிகாரங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பகமான வழி இருப்பது அத்தியாவசியம் என இலங்கை பிரதிநிதி விளக்கினார்.
அதிகாரங்களைத் தொடர்ந்தும் பேணுவது, நிறுவன ரீதியாக அவற்றைப் பேண வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் அன்றி, உறுதிப்படுத்தக்கூடிய விளைவுகளின் அடிப்படையில் மட்டுமே நியாயப்படுத்தப்பட வேண்டும் என்று தூதுவர் தெரிவித்தார். மேலும், பணிகள் ஒன்றுடன் ஒன்று மேலெழும் சந்தர்ப்பங்களில், பேரவையின் வளங்களைப் பயன்படுத்துவதன் செயல்திறனை அதிகரிப்பதற்காக அந்த அதிகாரங்களை ஒருங்கிணைக்க அல்லது முறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரினார். மனித உரிமைகள் பேரவையின் வரையறுக்கப்பட்ட வளங்கள் ஆயுத மோதல்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் இடம்பெயர்வுகள் போன்ற உலகம் எதிர்கொள்ளும் மிகவும் அவசரமான மனித உரிமைகள் சவால்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இலங்கை பிரதிநிதிகள் குழு மேலும் வலியுறுத்தியது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இலங்கையின் தேசிய செயல்முறை மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது என்றும், அந்த முன்னேற்றத்தை மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தூதுவர் தசநாயக்க குறிப்பிட்டார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த எழுத்துப்பூர்வ புதுப்பிப்பு உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் அவர்களின் பங்கேற்புடன் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. முழு ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுவதும் செயல்திறன் மற்றும் முன்னுரிமைகளை அதிகரிப்பதற்காக தற்போது நடைபெற்று வரும் சீர்திருத்தங்களுக்கு இணங்க, நாடுகள் குறித்த அறிக்கையிடலில் மிகவும் இலக்கு சார்ந்த, ஒப்பீட்டு மற்றும் அதிகாரங்கள் அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் இலங்கை இங்கு கோரியது.