பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கும், நாட்டின் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் செயல்முறையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும், இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் முழுமையான ஆதரவை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (29) இரவு முப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி இச்சந்திப்பில் வர்த்தக சமூகத்திற்கு விளக்கமளித்தார். இந்த நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு வர்த்தக சமூகத்திடமிருந்து பெறக்கூடிய பங்களிப்பு குறித்தும் இங்கு முதன்மையாக கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய அவசர நிலைமையின் மத்தியில் கைத்தொழில் துறை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் கைத்தொழில் துறையின் ஸ்திரத்தன்மையை தொடர்ச்சியாகப் பேணுவதற்கும் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றுலாத்துறை, விமான நிலையம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து வர்த்தக சமூகம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அனர்த்த நிலைமை தணிந்த பின்னர் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள், குறிப்பாக மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மீட்டெடுத்தல் அத்துடன் பிரதான வீதிகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
Tags:
News