'திட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும், இலங்கையின் ரஷ்ய தூதுவர் லெவன் ஜகரியன் (Levan Dzhagaryan) அவர்களுக்கும் இடையில் நேற்று (09) கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ரஷ்ய தூதுவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்தார். சூறாவளியால் சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் வீதி அமைப்புகளை மீண்டும் சீரமைப்பதற்கும், சேதமடைந்த ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் ஸ்தம்பித்துள்ள மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ரஷ்ய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறு
சஜித் பிரேமதாச அவர்கள் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யா வழங்கிய ஒத்துழைப்பிற்காக முழு இலங்கை மக்கள் சார்பிலும் ரஷ்ய தூதுவருக்கு தனது நன்றியைத் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நீண்டகால நண்பர்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வர்த்தக உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பெரும் பலம் கிடைக்கும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Tags:
News