களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரை இலக்கு வைத்து இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையின் 14ஆம் இலக்க சத்திரசிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரை நோக்கி, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை 06.00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ரிவோல்வர் ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய சந்தேகநபர் ஆவார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த கைதி தற்போது அவசர சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.