கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு கிவு மாகாணத்தின் கோமா நகரத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் வடமேற்கில் அமைந்துள்ள இந்தச் சுரங்கம் கடந்த புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் சுரங்கத் தொழிலாளர்கள் தவிர, சிறு குழந்தைகளும், வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பெண்களும் அடங்குவதாக அப்பகுதியை ஆட்சி செய்யும் கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் லுமும்பா கம்பரே முய்சா ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.கனமழை காரணமாக மண் தளர்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன், நிலச்சரிவு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்கள் சுரங்கக் குழியில் இருந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த சுமார் 20 பேர் தற்போது சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. M23 கிளர்ச்சிக் குழுவால் நியமிக்கப்பட்ட வடக்கு கிவு மாகாண ஆளுநர் எரஸ்டன் பஹாட்டி முசங்கா, பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சரியான இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், மாகாண ஆளுநரின் ஆலோசகர் ஒருவர், அடையாளம் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில், இறப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டக்கூடும் என்று கூறியுள்ளார்.
ருபயா சுரங்கம், உலகெங்கிலும் மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கு அத்தியாவசியமான டான்டலம் உலோகத்தைப் பெறப் பயன்படும் கோல்டன் கனிமத்தின் சுமார் 15 சதவீதத்தை வழங்குகிறது. இந்த கனிமம் மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் விமான பாகங்கள் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது. 2024 ஆம் ஆண்டு முதல், இந்தச் சுரங்கத்தின் கட்டுப்பாடு ருவாண்டாவின் ஆதரவைப் பெறுவதாகக் கூறப்படும் M23 கிளர்ச்சியாளர்களிடம் உள்ளது. கிளர்ச்சியாளர்கள் தங்கள் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க இந்தக் கனிம வளங்களை கொள்ளையடிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டுகிறது.
சுரங்கத்தில் பணிபுரியும் கைவினைஞர் சுரங்கத் தொழிலாளி ஃபிராங்க் போலிங்கோ, மழை காரணமாக திடீரென மண் சரிந்து மக்களை அடித்துச் சென்றதாகவும், பலர் மண்ணுக்குள் புதைந்து உயிருடன் புதைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். காங்கோவில் ஏராளமான கனிம வளங்கள் இருந்தாலும், அந்நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் மக்கள் மிகக் குறைந்த பணத்திற்காக தினசரி கைகளால் இந்தச் சுரங்கங்களை தோண்டி வருகின்றனர், இந்த சோகம் அந்நாட்டின் சுரங்கத் தொழிலில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.