பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை சவால் செய்து உயர் நீதிமன்றத்தில் இதுவரை நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை வெளியிட்ட சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவின் பிரதி தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கலாநிதி ஹர்ஷண நானாயக்கார கடந்த 7ஆம் திகதி இந்த சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்திருந்தார். இதற்கு எதிராக ஏதேனும் தரப்பினர் நீதிமன்றத்தை நாட விரும்பினால், அன்றிலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
யோசனை செய்யப்பட்ட சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாத இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 512 பேருக்கு உரித்தான ஓய்வூதிய உரிமை இரத்து செய்யப்படும்.