சுமார் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகைப் பிரிவில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, குணசிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகப் பெண் ஆவார். இவர் நேற்று துபாயில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL - 226 விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மடிக்கணினிகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மதுபானப் போத்தல்கள் அடங்கிய ஒரு தொகுதியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்டுபிடிக்க முடிந்தது.