அனுராதபுரம், கலன்பிந்துணுவெவ பிரதேசத்தில் ஒரு வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு முற்றியதால் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூவராக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலன்பிந்துணுவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரகம கொலனி, படிகாரமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த தீவிபத்தில் வீட்டிற்கு தீ வைத்த 43 வயதுடைய குடும்பத் தலைவரும் அவரது 13 வயது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 36 வயதுடைய மனைவியும் சற்று நேரத்திற்கு முன்னர் உயிரிழந்ததாக கலன்பிந்துணுவெவ பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களில் உயிரிழந்த தம்பதியரின் 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் உயிரிழந்த பெண்ணின் 66 வயது தாயார் ஆகியோர் அடங்குவர்.
தந்தை வீட்டிற்கு தீ வைத்தபோது, வீட்டில் இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த 20 வயது மகன், தீயில் சிக்கியிருந்த தனது தாயையும் சகோதரிகளையும் காப்பாற்ற முயன்றபோது அவரும் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வைத்த நபர் தொடர்ந்து மது அருந்தி மனைவியை தாக்கும் பழக்கம் கொண்டவர் என்றும், இந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கலன்பிந்துணுவெவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த சந்தர்ப்பங்களில் பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கியிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.