விசா விதிகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து இணையம் மூலம் சட்டவிரோத பிரமிட் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பதினாறு சீனப் பிரஜைகளை நேற்று (23) குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 05, ஜாவத்தை வீதியில் உள்ள டொன் கரோலிஸ் மாவத்தையில் அமைந்துள்ள ஒரு இடத்தில் இந்த குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் தற்காலிகமாக தங்கியிருந்தனர். குறித்த இடத்தில் ஏதேனும் சட்டவிரோத செயல் நடைபெறுவதாக குருந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எச். எச். சுஜீவ குமாரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விக்ரமரத்ன தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பை நடத்தியுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களிடமிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 3,280 வெளிநாட்டு சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அந்த தங்குமிடத்தை மேலும் சோதனையிட்டபோது, அவர்களின் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 23 மடிக்கணினிகள், 11 கையடக்கத் தொலைபேசிகள், 07 இணைய ரவுட்டர்கள் மற்றும் 09 குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
23 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த சீன சந்தேகநபர்கள் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணி பல்வேறு நபர்களை ஏமாற்றி இந்த நிதி மோசடிகளைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.