தலாங்கம, அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இன்று (18) உத்தரவிட்டார்.
இந்த சந்தேகநபர்கள் இன்று மீண்டும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்ட தரப்புக்காக சுமார் ஐம்பது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த போதிலும், சந்தேகநபர்களுக்காக இன்றும் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகாதது ஒரு விசேட சம்பவமாகும்.
வழக்கு நடவடிக்கைகளின் போது நீதிமன்றத்திற்கு ஏதேனும் தெரிவிக்க வேண்டுமா என நீதவான் சந்தேகநபர்களிடம் வினவியபோது, தாங்கள் ஒரு வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் அந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதவான், சம்பந்தப்பட்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவர்களை நீதவான் அலுவலக அறைக்கு அழைத்தார்.
மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவினர் இந்த கொலை தொடர்பாக மேற்கொண்ட விரிவான விசாரணைகளில், கொலையாளிகளுக்கு துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த இரண்டு சகோதரர்களும் கொட்டாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று மாலை பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் 'பொல்கஸ்ஓவிட்ட டிலா' என்ற புனைப்பெயரில் அறியப்படும் சந்தேகநபர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டார்.