நாட்டின் முதல் பெண் யானை பாகனாகக் கருதப்படும் 75 வயதுடைய பி. ஞானவதி அம்மையார் அண்மையில் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக களுத்துறை நாகொட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.அவரது உடல் அகலவத்தை மலர்சாலையில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், இறுதிச் சடங்குகள் கடந்த 21ஆம் திகதி பதுரலிய தும்பகல்ல தகனசாலையில் இடம்பெற்றன. ஞானவதி அம்மையார் 1995ஆம் ஆண்டு அளவில் தொம்பேயைச் சேர்ந்த சரத் காமினி ராஜபக்ஷ என்பவரை மணந்து, ஹேடிகல்ல, திக்வென பிரதேசத்தில் குடியேறினார். அதன் பின்னர், 2005ஆம் ஆண்டு அம்பத்தலை பிரதேசத்தில் ஒரு யானையைப் பராமரிப்பதற்காக தன்னுடன் ஞானவதி அம்மையாரும் சென்றதாக அவரது கணவர் காமினி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அங்கு ஞானவதி அம்மையாரும் காமினி ராஜபக்ஷவும் இணைந்து 'குணே' என்ற யானையைப் பராமரித்து வந்ததாகவும், 2017ஆம் ஆண்டுக்குள் அந்த யானையைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பும் அவருக்கே வழங்கப்பட்டதாகவும் காமினி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். குணே யானையுடன் ஞானவதி அம்மையார் கண்டி, லங்காத்திலக்க, நவகமுவ, களனி, பெல்லன்வில உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய ஊர்வலங்களை அலங்கரிக்கவும் பங்களித்துள்ளார்.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டு அளவில் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான யானையையும் ஞானவதி அம்மையார் மாதத்திற்கு பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்குப் பராமரித்ததாக அவரது கணவர் குறிப்பிடுகிறார்.