தென் கொரியாவின் சின்டோ (Jindo) மாகாணத்தின் மேயர் கிம் ஹீ-சூ (Kim Hee-soo), தென் கொரியாவின் சனத்தொகை வேகமாக குறைந்து வரும் நெருக்கடிக்கு தீர்வாக இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இளம் பெண்களை 'இறக்குமதி' செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ஆம் திகதி தென் கொரியாவின் ஹேனம் கலாச்சார மற்றும் கலை மையத்தில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தின் போது மேயர் இந்த கருத்தை முன்வைத்தார். குவாங்ஜு மற்றும் தென் ஜியோல்லா மாகாண நிர்வாகங்களை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் சனத்தொகை குறைந்து வரும் பகுதிகளில் 20% தனது மாகாணத்தில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய மேயர், இந்த நெருக்கடியைத் தீர்க்க உடனடியாக சட்டமியற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 2000 ஆம் ஆண்டு முதல் சனத்தொகை குறைப்பு குறித்து கணிப்புகள் இருந்தபோதிலும், அரசாங்கம், அறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் சரியான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டனர் என்று அவர் குற்றம் சாட்டினார். தற்போதைய சூழ்நிலையில் நகரங்களும் மாகாணங்களும் இந்த சிக்கலில் இருந்து தனியாக மீள முடியாது என்றும் அவர் கூறினார்.
குவாங்ஜு மற்றும் தென் ஜியோல்லா இணைக்கப்படும் போது சனத்தொகை குறைப்பை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் சட்டமாக்கப்பட வேண்டும் என்றும், மற்ற அனைத்து முறைகளும் தோல்வியடைந்தால், இலங்கை அல்லது வியட்நாமில் இருந்து இளம் பெண்களை வரவழைத்து கிராமப்புறங்களில் உள்ள திருமணமாகாத ஆண்களுடன் திருமணம் செய்து வைக்க ஒரு சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்வைத்த யோசனையே இங்கு அதிகம் பேசப்பட்டது. மக்கள் இல்லாமல் தொழில்களை எவ்வாறு நடத்துவது என்று அவர் கேள்வி எழுப்பினார், மேலும் 'இளம் பெண்களை இறக்குமதி செய்வது' பற்றிய இந்த அறிவிப்புடன் கூட்ட அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.
எவ்வாறாயினும், இந்த அறிக்கைக்கு பதிலளித்த குவாங்ஜு மேயர் காங் கி-ஜங் (Kang Gi-jung), தனது கையை அசைத்து அந்த யோசனையை கடுமையாக எதிர்த்து நிராகரித்தார். திருமணத்திற்காக வெளிநாட்டினரை வரவழைக்கும் யோசனை தவறானது என்று சுட்டிக்காட்டிய அவர், பிராந்தியத்தில் தொழில்களை நிறுவுவதன் மூலம் மட்டுமே பிறப்பு விகிதத்தையும் சனத்தொகையையும் அதிகரிக்க முடியும் என்று வலியுறுத்தினார். பல தசாப்தங்களாக முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை என்றும், தொழில்களை மேம்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிராமப்புற சனத்தொகை குறைவை தீர்க்க தொழில்களை ஒருங்கிணைப்பது மட்டும் போதாது என்று சுட்டிக்காட்ட முயன்றாலும், வெளிநாட்டுப் பெண்களை 'இறக்குமதி' செய்யப்பட வேண்டிய பொருட்களாக சித்தரிப்பதும், குறிப்பிட்ட நாடுகளைப் பெயரிடுவதும் பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பன்முக கலாச்சாரம், மனித உரிமைகள் மற்றும் பாலின உணர்திறன் இல்லாததைக் காட்டுகிறது என்றும், வெளிநாட்டினரை வெறும் தொழிலாளர்களாகவோ அல்லது திருமண வேட்பாளர்களாகவோ மட்டுமே பார்க்கும் மனப்பான்மையை இது பிரதிபலிக்கிறது என்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
(சோசுன் இணையதள செய்தி அறிக்கையின் அடிப்படையில்)