14 வயது பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் காணொளி காட்சிகள் அவரது காதலன் என கூறப்படும் இளைஞனின் கையடக்க தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மாணவியின் சகோதரன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான இளைஞனின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது இந்த குற்றம் தொடர்பான தகவல்கள் சகோதரனுக்கு தெரியவந்துள்ளன. அதன்படி, அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 03ஆம் திகதி இரவு இந்த 19 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முறைப்பாட்டாளரான சகோதரனின் உறவினர் ஒருவரின் நண்பர் என்றும், அவர் நீண்டகாலமாக இந்த சிறுமி மாணவியுடன் காதல் உறவில் இருந்து வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அழைப்பொன்றை மேற்கொள்வதற்காக சந்தேகநபரிடம் இருந்து அவரது கையடக்க தொலைபேசியை கேட்டுப் பெற்ற சகோதரன், அதனை பரிசோதித்த போது தனது சகோதரி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் காட்சிகளை கண்டதை அடுத்து, உடனடியாக இது குறித்து கந்தானை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிஸார் சம்பந்தப்பட்ட கையடக்க தொலைபேசியை பொறுப்பேற்று, அதில் இருந்த காட்சிகளை பரிசோதித்து குற்றத்தை உறுதிப்படுத்திய பின்னர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். கந்தானை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரூவன் குமார தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் உத்பலா மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சலிந்த உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.