மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்தில் இறுதி ஆண்டு படிக்கும் 25 வயது மாணவர் ஒருவரிடமிருந்து போதைப்பொருள் இருப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மொரட்டுவ தலைமையக பொலிஸாரால் கடந்த 3ஆம் திகதி இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட மாணவரிடம் போதைப்பொருள் இருப்பதாக பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபரான மாணவரை சோதனைக்கு உட்படுத்தியது.
அந்த சோதனையின் போது, மாணவரிடமிருந்து 11 கிராம் 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் 22 மில்லிகிராம் ஹேஷ், 24 கிராம் 50 மில்லிகிராம் கஞ்சா, 2 போதை மாத்திரைகள் மற்றும் 15 போதை ஸ்டாம்புகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவரிடமிருந்த 59,000 ரூபாய் பணமும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீண்டகாலமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்று வருவதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன், அவருக்கு இந்த போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது மற்றும் கடத்தல் தொடர்பாகவும் பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகமும் உள் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்தேகொட சாந்த பிரதீப் குமார குலரத்ன மற்றும் தெஹிவளை எச்.எம். தர்மபால ஆகிய செய்தியாளர்கள் குறிப்பிட்டபடி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (04) மொரட்டுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.