பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முறைப்பாடு சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது, பிரதிவாதி டெய்சி ஃபோரஸ்ட் அம்மையார் வழக்கு விசாரணையில் ஆஜராகும் அளவுக்கு மனநல நிலையில் உள்ளாரா என்பது குறித்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக வரவழைக்கப்பட்ட விசேட வைத்திய அறிக்கை இன்னும் நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை.
அதன்படி, சம்பந்தப்பட்ட பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைக்கும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட நீதிபதி, அந்த வழக்கை மீண்டும் ஏப்ரல் 24ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.