பயாகல பிரதேசத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று ரயிலுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், தியலகொட பாலம் அமைக்கும் திட்டத்தில் கடமையாற்றிய இரு அதிகாரிகளே உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர்கள், குறித்த நிறுவனத்தின் திட்ட நிர்வாக அதிகாரியான ரம்புக்கனை, போலகம, எல்லேதெனியவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய ரணசிங்க ஆராச்சிலாகே பசிந்து சுபுன் ரணசிங்க மற்றும் ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியான 28 வயதுடைய கருணாரத்ன முதியன்சேலாகே விஹங்க ருக்ஷான் பண்டார கருணாரத்ன ஆகியோராவர். விபத்து நடந்த நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற புலத்சிங்கள, பரகொடவைச் சேர்ந்த 39 வயதுடைய தெதிகமுவகே குஷான் பிரதீப் என்ற சாரதி பலத்த காயங்களுடன் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த மரணங்கள் தொடர்பான திடீர் மரண விசாரணை களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி கே.டி. விராத் பாரத முன்னிலையில் 23ஆம் திகதி காலை நடத்தப்பட்டது. அங்கு சாட்சியமளித்த பெலியத்தையிலிருந்து மருதானை வரை பயணித்த இலக்கம் 57 காலி குமாரி ரயிலின் சாரதியான பேருவளை, பங்களாவத்தையைச் சேர்ந்த 52 வயதுடைய கொஸ்வத்த ஆராச்சிகே டொன் மஹேந்து மானவசார, 26 வருட சேவை அனுபவமுள்ள தான், குறித்த சிவப்பு நிற கார் காலி வீதியில் ரயில் பாதைக்கு இணையாக வந்து திடீரென பாதுகாப்பற்ற கடவைக்குள் நுழைய முயன்றதை உணர்ந்ததாகக் கூறினார். அதனுடன், தான் ரயிலின் ஹார்னை ஒலித்து அவசரகால பிரேக்கை இயக்கிய போதிலும், கார் ரயிலுடன் மோதி சுமார் 420 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அன்றைய தினம் காலை 8.41 மணியளவில், ரயில் மணிக்கு சுமார் 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக நேரில் கண்ட சாட்சியமளித்த மோல்காவ, புஸ்ஸமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய புஸ்ஸமுல்லகே மகேஷ் பெரேரா என்ற எக்ஸ்கவேட்டர் இயந்திர இயக்குநரானவர், வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்குச் செல்வதற்காக கார் சாரதி தன்னையும் அதில் ஏறுமாறு கூறியதாகத் தெரிவித்தார். இருப்பினும், தான் அதை மறுத்து நடந்து சென்றதாகவும், கார் கடவைக்குள் நுழைந்தவுடன் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் அவர் கூறினார். பின்னர், அப்பகுதி மக்களுடன் இணைந்து வாகனத்தின் கதவுகளை உடைத்து சிக்கியிருந்த மூவரையும் வெளியே எடுத்து வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சாட்சியமளித்தார்.
உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் தந்தையர்களான 59 வயதுடைய கருணாரத்ன முதியன்சேலாகே சுனில் கருணாரத்ன மற்றும் 48 வயதுடைய ரணசிங்க ஆராச்சிலாகே நிமல் சாந்த ரணசிங்க ஆகியோரும் இங்கு சாட்சியமளித்துள்ளனர். களுத்துறை போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி கே.எம்.டி.பி. குணதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்ட மரண விசாரணை அதிகாரி, ரயிலுடன் மோதியதால் ஏற்பட்ட மழுங்கிய சக்தியினால் தலை, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே இந்த மரணங்களுக்கு காரணம் என முடிவுக்கு வந்தார். பயாகல பொலிஸ் சார்ஜன்ட் (55228) ஜி.டி.எச்.எச். ஜெயசேகர மரண விசாரணையின் சாட்சியங்களை வழிநடத்தினார்.