பொது மக்களுக்கு மரியாதைக்குரிய மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக நாட்டின் முழு போக்குவரத்து அமைப்பையும் விரைவான மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பொருளாதார போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகிய ஐந்து தூண்களின் ஊடாக போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டம் குறித்து இங்கு தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
கொழும்பு நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கான பேருந்துகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பைச் சுற்றியுள்ள ஆறு முக்கிய வீதிகளை மையமாகக் கொண்டு ஒரு முன்னோடித் திட்டமாக இதைச் செயல்படுத்தவும், பயணிகளை பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்த்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கண்டி மற்றும் காலி உட்பட எட்டு முக்கிய நகரங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள சிதறிய பேருந்து சேவைக்கு பதிலாக போக்குவரத்து நிறுவனங்கள் அல்லது கொத்தணிகள் (Clusters) முறையை நிறுவுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலாபம் தொடர்பான ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அரசாங்கத்தின் ஆதரவை வழங்க முடியும் என்றும், மக்களுக்குத் தேவைப்படுவது முறை எதுவாக இருந்தாலும் ஒரு நல்ல போக்குவரத்து சேவை கிடைப்பதுதான் என்றும் சுட்டிக்காட்டினார். பேருந்து உரிமையாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையிலும், அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையிலும் ஒப்பந்தங்கள் மூலம் தொடர்ச்சியான சேவையை உறுதிப்படுத்த முடியும் என்பதும் ஜனாதிபதியின் கருத்தாக இருந்தது.
பல்துறை போக்குவரத்து மையங்களை திட்டமிடும்போது, ரயில் சேவையை மையமாகக் கொண்டு மற்ற போக்குவரத்து சேவைகள் அதைச் சுற்றி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், களனிவெளி ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான மின்னணு கட்டண முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், தனியார் துறையின் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்களை வழங்குவது உட்பட நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு பத்து ஆண்டுகளாக சிப் வழங்கப்பட்ட போதிலும், புள்ளிகள் குறைக்கும் முறையை செயல்படுத்துவதற்கான மென்பொருள் அமைப்பு தயாரிக்கப்படவில்லை என்றும், Gov.pay மூலம் அடுத்த சில மாதங்களுக்குள் அந்த முறையை சரியாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு தெரியவந்தது. முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை வேன்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தவும், சிசு செரியா சேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறம்பட பயன்படுத்தி மாணவர்களுக்கு நேரடி நன்மைகள் கிடைக்கும் வகையில் அந்த சேவையை விரிவுபடுத்தவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.