வலஸ்முல்ல, போவல வீதியில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் இருபத்து மூன்று வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 30ஆம் திகதி மாலை 6.25 மணியளவில் போவல ரணவிரு மாவத்தைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருபத்தொரு வயதுடைய மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்து வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் வலஸ்முல்ல, எத்பிட்டிய, பன்சல வீதி, கபுஹேன்கொட முகவரியில் வசித்து வந்த கங்கொட மானகே தினேஷ் சாமர என்ற திருமணமாகாத இளைஞர் ஆவார். விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் வலஸ்முல்ல, போவல வீதி, கொஸ்கஹகொடவில் வசிக்கும் எல்லவெல பஹலகே பசிந்து சந்தருவன் என்ற இளைஞர் ஆவார்.
வலஸ்முல்ல திடீர் மரண விசாரணை அதிகாரி சந்தசிறி ரணசிங்க, உயிரிழந்த இளைஞரின் திடீர் மரண விசாரணையை 31ஆம் திகதி வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் நடத்தினார். அப்போது, விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான இருபத்தைந்து வயதுடைய பிரமோத் கௌசல்ய சமரதுங்க சாட்சியமளித்து சம்பவத்தை விவரித்தார். தனது மோட்டார் சைக்கிள் அதிவேகமாகச் செல்லக்கூடிய வகையைச் சேர்ந்தது என்பதால், அதை ஓட்டும் ஆசையால் உயிரிழந்த தினேஷ் சாமர தன்னிடம் மோட்டார் சைக்கிளைக் கேட்டு எடுத்துச் சென்றதாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு இந்த விபத்து நடந்ததாக தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
விபத்து நடந்த இடத்திற்குச் சென்றபோது, தினேஷ் வீதியின் இடதுபுறத்தில் உள்ள இலுக்கம்புல் புதரில் இருந்த மின் கம்பத்திற்கு அருகில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்ததாகவும், மோட்டார் சைக்கிள் சுமார் 20 மீட்டர் தூரத்தில் விழுந்து கிடந்ததாகவும் சாட்சி விசாரணையில் தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் சிலர் முச்சக்கர வண்டியில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. உயிரிழந்தவரின் இளைய சகோதரரான கங்கொட மானகே தாரக ரொமால் என்பவரும் இங்கு சாட்சியமளித்தார்.
தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எச்.ஜி. பிரமுதித் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார். வீதி விபத்து காரணமாக மண்டை ஓடு மற்றும் மூளைக்கு ஏற்பட்ட பலத்த சேதங்களே இந்த மரணத்திற்கு காரணம் என முடிவு செய்யப்பட்டது. வலஸ்முல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஓஷத த சில்வா அவர்களின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.