தற்போதைய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அஜந்த நிரோஷன் பாதுக்கவுக்கு ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இலக்கு வைத்து வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, சட்டத்தரணி சம்பத் யாலெவத்த ஊடாக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 01 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு திகதியில் நிரோஷன் பாதுக்க நடத்திய ஊடக சந்திப்பில், தடைசெய்யப்பட்ட மருந்து நிறுவனத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான கடன் அட்டையைப் பயன்படுத்தி அமைச்சர் இந்தியாவில் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பொதுமக்களுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அந்தக் குற்றச்சாட்டு உண்மை என நம்பவைக்கும் வகையிலும் இந்த பகிரங்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார்.
சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கும் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, தான் எந்த சந்தர்ப்பத்திலும் அத்தகைய கடன் அட்டையைப் பயன்படுத்தவில்லை என்று வலியுறுத்துகிறார். இந்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்றும், தன்னை ஊழல்வாதியாகவும், அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவராகவும் சித்தரிக்க எடுக்கப்பட்ட முயற்சி என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார். இதன் மூலம் தனது இதுவரை களங்கமற்ற அரசியல் வாழ்க்கைக்கும் நற்பெயருக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
பெப்ரவரி 02 ஆம் திகதி அனுப்பப்பட்ட இந்த சட்ட அறிவிப்பில், சம்பந்தப்பட்ட அவதூறான அறிக்கை காரணமாக ஏற்பட்ட சேதத்தை ஈடுசெய்வதற்காக ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈட்டை 14 நாட்களுக்குள் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அந்தத் தொகை செலுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.