ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சமூக சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கான ஒருமுறை வழங்கப்படும் 10,000 ரூபா கல்வி உதவித்தொகையை இரண்டு பிள்ளைகளின் பெயரில் பெற்றுக்கொண்டு, அந்தப் பணத்தை அவர்களுக்கு வழங்காமல் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியுள்ளார் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கட்டான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை அதிகாரி ஆவார். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால் ஒரு பிள்ளைக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் குறித்த பணத்தை சந்தேகநபரான சமூக சேவை அதிகாரி பெற்றுக்கொண்டு, மிகவும் சூட்சுமமாக தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.