சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று (16) எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டது. இந்த எதிர்ப்புப் பேரணி உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதான அலுவலகம் வரை சென்றது.
இந்த கொலைக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சட்டத்தரணிகளின் இந்த எதிர்ப்பை அடையாளப்படுத்தும் வகையில், நாட்டின் பல நீதிமன்ற வளாகங்களில் கறுப்புக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த குற்றத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் அவர்களது பிட்டிகலவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.
