இன்று (13) மாலை 5.00 மணியளவில் தலங்கம பொலிஸ் பிரிவில் பத்தரமுல்லை பெலவத்த, அக்குரேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள கீல்ஸ் பல்பொருள் அங்காடியின் வாகனத் தரிப்பிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மோட்டார் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஆவர்.
பொலிஸ் அறிக்கைகளின்படி, குறித்த தம்பதியினர் தமது மோட்டார் காரில் இருந்தபோது இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றொரு மோட்டார் காரில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே மோட்டார் காருக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர். தாக்குதலை நடத்தியவுடன் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் அடையாளம் அல்லது இந்தக் கொலை எந்தக் காரணத்திற்காக யாரால் செய்யப்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும் குற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் தற்போது மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.