
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (ICCPR) சட்டத்தைப் பயன்படுத்தி நகைச்சுவை கலைஞர் நடாஷா எதிரிசூரியா கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி இன்று (19) உயர் நீதிமன்றத்தில் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். அவர் பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த கைது இடம்பெற்றிருந்தது.
முன்னாள் பொறுப்பதிகாரியின் இந்த வருத்தத்தை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அரச சட்டத்தரணி உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தார்.
மேலும், குறித்த சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் விசேட வழிகாட்டல் தொகுதியை அறிமுகப்படுத்த பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு மேலும் அறிவித்தார்.
இந்த விடய விளக்கங்கள் மற்றும் உடன்பாடுகளை பரிசீலித்த பின்னர், குறித்த சம்பவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவின் விசாரணைகள் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.