பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்தின் போர்வையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தை சுற்றிவளைத்து, அங்கு செயற்பட்ட ஒரு வைத்தியரை கைது செய்ய பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் பேருவளை பிரதேசத்தில் மருத்துவ அதிகாரியாக கடமையாற்றியவர் என்றும், பேருவளை பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் இந்த மோசடி நடைபெறுவதாக களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ. உதய குமாரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட தகவல் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அனுப்பப்பட்ட பின்னர், ஒரு இரகசிய முகவர் மூலம் இந்த வைத்தியரைத் தொடர்புகொண்டு கருக்கலைப்பு செய்வதற்கான நேரத்தை ஒதுக்க பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதன்படி, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தேடுதல் வாரண்டுடன் கடந்த 8ஆம் திகதி செயற்பட்ட பொலிஸ் குழு, பேருவளை பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் உள்ள பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள 'பேருவளை நர்சிங் ஹோம்' என்ற இடத்திற்குச் சென்றுள்ளதுடன், அங்கு இரகசிய முகவராக அனுப்பப்பட்ட ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கருக்கலைப்பு செய்யத் தயாரான வேளையிலேயே சந்தேகநபர் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.
இந்த இடத்தில் இருந்து கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் ஒரு கருக்கலைப்புக்கு நாற்பத்தைந்தாயிரம் ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அறவிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டதும், அவரது உதவியாளராக செயற்பட்ட பெண் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளதுடன், தன்னை கைது செய்யாமல் இருக்க அதிகாரிகளுக்கு எந்தப் பணத்தையும் கொடுக்க வைத்தியர் முன்வந்த போதிலும், அதிகாரிகள் அந்த இலஞ்சத்தை மறுத்து அவரை கைது செய்துள்ளனர்.
இது தவிர, மேலதிக விசாரணைகளில் இந்த வைத்தியர் நீண்ட காலமாக போதை மாத்திரை கடத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் அறிவுறுத்தலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக்க வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.