பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் கொலை தொடர்பான தீர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாட பிரதிவாதிகளின் உறவினர்கள் குழுவொன்று நேற்று (23) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வந்திருந்தது. அங்கு பிரதிவாதிகளின் உறவினர்கள் குறித்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு ஒரு மகஜரையும் கையளித்தனர்.
மகஜரை கையளித்த பின்னர், அவர்கள் ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் ஒருவருடன் கலந்துரையாடலையும் நடத்தினர்.கலந்துரையாடலின் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் கொலை தொடர்பான தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்கள் குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். பிரதிவாதிகளின் உறவினர்கள் அங்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:
“நாங்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஒரு கடிதத்தை கையளிக்க வந்தோம். அத்துடன், எங்கள் வழக்கு தொடர்பாக ஒரு மேன்முறையீட்டையும் சமர்ப்பிப்போம். ஐவர் கொண்ட நீதிமன்றத்தில் நாங்கள் உண்மையில் ஒரு நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதிக்கு நாங்கள் நீதியை நிலைநாட்டுமாறு கோரினோம். நாங்கள் இந்த நேரத்தில் மிகவும் உதவியற்ற நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் உள்ள தாய்மார்கள் பலர் உள்ளனர். மேன்முறையீடு செய்து இந்த 12 பேரையும் வெளியே கொண்டு வருவதே எங்கள் ஒரே நம்பிக்கை.” Email ThisBlogThis!Share to XShare to Facebook