சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அம்மையாரின் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நோக்கமாகக் கொண்டு 16ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்தது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த தூதுக்குழுவை வரவேற்பதற்காக தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஆகிய டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
அண்மையில் தீவை கடுமையாகப் பாதித்த 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதன் உண்மையான தாக்கத்தை நேரடியாக அவதானிப்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதன்படி, 17ஆம் திகதி முற்பகல் இந்த பிரதிநிதிகள் குழு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை பிரதேசத்தில் விசேட கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
அதன் பின்னர், கொழும்பில் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு எதிர்பார்க்கிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவுள்ளனர். தற்போதைய அனர்த்த நிலைமைக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு வலுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் தலையீடு குறித்து அங்கு விரிவான கவனம் செலுத்தப்படும்.