இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த விசேட கலந்துரையாடலின் போது, கடந்த ஆண்டுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்க முன்னர் அங்கீகரிக்கப்பட்ட 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை மேலும் விரிவுபடுத்தி அதனை 480 மில்லியன் டொலர்களாக அதிகரிக்க தலைவர் தனது இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நிதி முகாமைத்துவத்தை தற்போதைய அரசாங்கம் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வது,
விரயத்தைக் குறைத்தல் மற்றும் மக்கள் சார்பாக முடிவுகளை எடுத்தல் என்பன தலைவரின் பாராட்டைப் பெற்றுள்ளன. அத்துடன், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு அத்தியாவசியமான ஆதரவாக மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மிக விரைவாக இலங்கைக்கு விடுவிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் அங்கு தீர்மானித்துள்ளனர்.