2020 ஆம் ஆண்டு கொழும்பு குற்றப் பிரிவினரின் தடுப்புக் காவலில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான மாக்கந்துரே மதுஷின் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய கொலைச் சம்பவம் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி மாளிகாவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மதுஷ் வழங்கிய தகவலின்படி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் தொகுதியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் அவரை குறித்த பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், உடனடியாகச் செயற்பட்ட அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணைப் பணிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் ஒப்படைக்கப்பட்டன. கொல்லப்பட்ட மாக்கந்துரே மதுஷின் சகோதரர் ஒருவர் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்த முறைப்பாடு மற்றும் விசேட கோரிக்கையை கருத்தில் கொண்டு பொலிஸ்மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இந்த புதிய விசாரணைக்கு இணையாக, சம்பவம் நடந்த அன்று மதுஷை மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் பொலிஸ் குழுவில் இருந்த கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து விரைவில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. மேலும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இது குறித்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர், சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரியிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கும், சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு ஊடக நிறுவனங்களிடம் உள்ள வீடியோ காட்சிகளை விசாரணை நடவடிக்கைகளுக்காகப் பெறுவதற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.