
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் இரு பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய, அந்த குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகளை வழங்கியதாகக் கூறப்படும் மருந்தக உரிமையாளர் ஒருவரை மட்டக்களப்பு மாகாண விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த மனிதாபிமானமற்ற கடத்தல், கொலை மற்றும் கொள்ளை தொடர்பில் இதற்கு முன்னரும் பல சந்தேக நபர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு வெற்றி பெற்றது. அதன்படி, கொலைச் செயலுடன் நேரடியாகத் தொடர்புடைய மூவர் மற்றும் அவர்களால் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை வைத்திருந்த இரு வர்த்தகர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன. இதன் விளைவாக, கடந்த 28ஆம் திகதி ஒரு சந்தேக நபரான பெண்ணின் வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், பெண்களை மயக்கமடையச் செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மருந்துப் பொருட்கள் தொகுதியை பொலிஸ் அதிகாரிகள் கண்டறிய முடிந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவர்கள் குறித்த மருந்துகளை வத்தளை பிரதேசத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய பின்னர் உடனடியாகச் செயற்பட்ட மாகாண விசாரணை அதிகாரிகள் குழு ஒன்று நீர்கொழும்பு பிரதேசத்திற்குச் சென்று குறித்த வத்தளை மருந்தகத்தின் உரிமையரை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மருந்தக உரிமையாளர் நேற்று (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். மேலும், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவரை மேலும் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான தேவையான நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதற்கு பொலிஸார் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.