வெள்ளவத்தை, ஹேவ்லாக் வீதியில் உள்ள மில் வட்டாரத்திற்கு அருகில் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்ற ஒரு மோட்டார் காரை நிறுத்திய பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய ஐந்து தனியார் வங்கி ஊழியர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19ஆம் திகதி நள்ளிரவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், சாரதிக்கு அபராத சீட்டு வழங்க முற்பட்டபோது கோபமடைந்த இந்த குழுவினர் ஒரு பொலிஸ் அதிகாரியை கீழே தள்ளி தாக்கியுள்ளனர்.
குறித்த மோட்டார் கார் வீதிப் பாதைகளை மாற்றி மிகவும் கவனக்குறைவாக ஓட்டப்பட்டுள்ளதுடன், கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களால் அது நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது தவறை விளக்கி அபராத சீட்டு வழங்கத் தயாரான வேளையில் காரின் சாரதியும் பின் இருக்கையில் இருந்த நால்வரும் வெளியே வந்து பொலிஸ் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சண்டையிட்ட அவர்கள் ஒரு அதிகாரியை வீதியில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட சண்டையின் காரணமாக காயமடைந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் சிகிச்சைக்காக களுபோவிலையில் உள்ள தென் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு கோட்டைப் பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் குழுவினர் ஆவர். அவர்கள் காலி, பாணந்துறை மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். கொழும்பு தாமரைத் தடாகம் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டு மீண்டும் மோட்டார் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கும் வேளையில் வீதியில் பயணித்த ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு பொலிஸ் குழு அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த பொலிஸ் குழுவும் வீதியில் பயணித்த பொதுமக்களின் உதவியுடனும் பெரும் முயற்சி எடுத்து சண்டையிட்ட வங்கி ஊழியர்கள் ஐவரையும் கட்டுப்படுத்தி கைது செய்ய முடிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
