தற்போது நாடு முழுவதும் எரிபொருள் தொடர்பான பாரிய கள்ளச்சந்தை வர்த்தகம் நடைபெற்று வருவதால், கள்ளச்சந்தை வர்த்தகர்களின் தேவைகளை விட சாதாரண மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். கடந்த 27ஆம் திகதி மகரகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மகரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கடமையாற்றும் அரச அதிகாரிகள் எரிபொருள் சேமிப்பு குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அங்கு சுட்டிக்காட்டினார். தற்போது அரச நிறுவனங்களிடம் சுமார் 92,000 வாகனங்கள் இருப்பதாகவும், ஒரு வாகனத்தில் ஒரு நாளைக்கு ஒரு லீட்டர் எரிபொருளை சேமித்தால், மொத்தமாக ஒரு நாளைக்கு 92,000 லீட்டர் எரிபொருளை சேமிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, பிரதேச செயலகம் முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் வாகனப் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு வாகனங்களில் செல்ல வேண்டிய பயணங்களுக்கு ஒரு வாகனத்தை மட்டும் பயன்படுத்துவது போன்ற புதிய வழிமுறைகள் மூலம் இந்த சேமிப்பை மேற்கொள்ள முடியும் என்றும் பிரதி அமைச்சர் விளக்கினார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பம்பர்களுக்கு சுமார் 200 ரூபாய் கொடுத்து எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்பும் ஒரு வணிகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையமும் QR முறைக்கு அப்பால் எரிபொருளை வழங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். QR முறைக்கு வெளியே எரிபொருள் வழங்குவது மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்ட பின்னர் இரகசியமாக எரிபொருளை விற்பனை செய்யும் இடங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வட்டகல தெரிவித்தார். சிலரின் வீடுகளிலோ அல்லது வணிக இடங்களிலோ சட்டவிரோதமாக எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தால், உடனடியாக அந்த இடங்களை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும், அதன்படி செயல்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.