நுவரெலியா பிரதேச சபையின் தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. வேலு யோகராஜன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் என்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டின் பேரில் இன்று காலை 9.10 மணியளவில் தலைவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு மேலும் அறிவிக்கிறது.
அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு 2021 ஆம் ஆண்டில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயலை அடிப்படையாகக் கொண்டது. பிரதேச சபை அதிகார எல்லைக்குள் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை மீறியுள்ளமை அங்கு தெரியவந்துள்ளது. அதன்படி, 476/எல் மாகொட கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான காணிக்கு ஒரு கட்டுமானத் திட்டத்தை அங்கீகரித்து, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு அநியாயமான நன்மையை வழங்குவதன் மூலம் அவர் இந்த குற்றத்தைச் செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட திரு. வேலு யோகராஜன், 24 உறுப்பினர்களைக் கொண்ட நுவரெலியா பிரதேச சபையின் தலைவராக அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்டது இந்த சபை. அதன் உப தலைவியாக தேசிய மக்கள் சக்தியின் ஹேவகே ஆஷா தில்ருக்ஷி பொன்சேகா அம்மையார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நுவரெலியா பிரதேச சபையின் தலைவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.