ஷம்மி சில்வா கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்

shammi-silva-out-of-cricket-chairmanship

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய தலைவர் ஷம்மி சில்வா இன்று (28) தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். கிரிக்கெட் செயற்குழுவால் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் அவர் தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன், முழு செயற்குழுவும் தமது பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட அவரது பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கவிருந்த போதிலும், அண்மையில் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டுள்ளது.




இந்த திடீர் இராஜினாமாவுக்கு தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் வழங்கப்பட்ட கடுமையான உத்தரவுகளும், அரசாங்கத்தின் அழுத்தங்களும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. அத்துடன், அண்மையில் நிறைவடைந்த இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை தேசிய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும், முதல் சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேற நேர்ந்ததாலும் உள்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். மேலும், நீண்ட காலமாக கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக எழுந்த நிதி முறைகேடுகள், ஊழல் மற்றும் திறமையின்மை குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து மகா சங்கத்தினர், பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய பாரிய போராட்டங்களும் இந்த நிர்வாக மாற்றத்திற்கு நேரடியாகப் பங்களித்துள்ளன.

தற்போது நிலவும் இந்த நெருக்கடி நிலையைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அரசாங்கம் ஒரு விசேட இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய இடைக்காலக் குழுவின் தலைவராக, திறமையான நிர்வாகியும், கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் முதன்மை நோக்கம், விரைவில் ஒரு தேர்தலை நடத்தி, தகுதியான புதிய நிர்வாக சபையிடம் கிரிக்கெட் நிர்வாகத்தை ஒப்படைப்பதாகும்.




அரசாங்கம் கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட்டதன் காரணமாக, இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அங்கத்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. இருப்பினும், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த புதிய நிலைமை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். விரைவான செயல்முறை மூலம் தேர்தல் நடத்தப்பட்டால், இடைக்காலக் குழுவை நியமிக்கும் நடவடிக்கைக்கு அவர்களின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post