சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் வீட்டிற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில், சுமார் 35 அடி ஆழமுள்ள இந்த கிணற்றுக்குள் இருந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பதில் நீதவானின் மேற்பார்வையின் கீழ் நேற்று (20) அது மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 'சங்க' என்ற 28 வயது இளைஞன் என பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த மர்ம மரணம் தொடர்பாக உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பர் என கூறப்படும் ஒருவர் மிதிகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல்களின்படி, உயிரிழந்தவர் போதைப்பொருள் பாவனையில் தீவிரமாக ஈடுபட்டவர் என்றும், அவர் ஏதேனும் குற்றச் செயலுடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்ட சந்தேகநபர் தானா என்பதை உறுதிப்படுத்த பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சடலத்தை மாத்தறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மாத்தறை பதில் நீதவான் பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டுள்ளார். இந்த மரணம் ஒரு குழுவினரால் செய்யப்பட்ட கொலையா அல்லது வேறு வகையான விபத்தா என்பதை துல்லியமாக கண்டறிய மிதிகம பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.