இலங்கை மத்திய வங்கியிலிருந்து வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும் பொறுப்பை நீக்கி, புதிய பொறிமுறையின் கீழ் அரச கடன் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்றும், இதன் காரணமாக அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய இருபத்தைந்து இலட்சம் அமெரிக்க டொலர் பணம் இணையத் தாக்குதலால் காணாமல் போயுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தினார். நாட்டின் பொதுமக்களின் வரிப்பணம் இவ்வாறு ஒரு ஹேக்கர் மூலம் திருடப்பட்டதன் மூலம் நாட்டின் நிதிப் பாதுகாப்பு குறித்து மிகவும் பாரதூரமான நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜனவரி மாதம் இந்தத் திருட்டு இடம்பெற்றிருந்தாலும், அது குறித்து ஆராய ஒரு குழு மார்ச் மாதத்திலேயே நியமிக்கப்பட்டது என்றும், இந்த பாரிய நிதி இழப்பை நேற்று வரை பாராளுமன்றத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் மறைக்க தற்போதைய அரசாங்கமும் நிதி அமைச்சும் செயற்பட்டுள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினார். நிதி தொடர்பான முழு அதிகாரமும் பொறுப்பும் பாராளுமன்றத்திடம் இருந்தாலும், பல மாதங்களாக இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தமை மற்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்ததன் மூலம் அந்த விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரம் குறித்தும் அவர் கடுமையான சந்தேகத்தை எழுப்பினார்.
இவ்வளவு பெரிய தொகை இணையத் தாக்குதலால் இழந்தது குறித்து விசாரணைகள் இடம்பெறும் பின்னணியிலும், இதற்குப் பிரதானமாகப் பொறுப்பான அரச கடன் முகாமைத்துவ நிறுவனம் பொதுநலவாயக் கடன் முகாமைத்துவ விருதைக்கூடப் பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். வங்கி முறைமை ஊடாக சர்வதேச நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பான மின்னஞ்சல்கள் (Registered White listed emails), மின்னஞ்சல் இழப்பீட்டு முறைகள் (Email indemnities) மற்றும் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தல்கள் (Call of verification) போன்ற பல பாதுகாப்பு முறைகள் இருந்தபோதிலும், நிதி அமைச்சும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அவற்றை முறையாகச் செயற்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், கொடுக்கல் வாங்கல் செயல்முறையில் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மத்திய வங்கி பல சந்தர்ப்பங்களில் கடன் முகாமைத்துவ நிறுவனத்திற்கு எச்சரித்திருந்தும் அவற்றை அலட்சியப்படுத்தியமை குறித்து ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"புத்திசாலித்தனமான அரசாங்கம்" மற்றும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட ஒரு நாட்டை உருவாக்குவதாக தற்போதைய அரசாங்கம் பெருமை பேசினாலும், இறுதியில் ஒரு மோசடி ஹேக்கரிடம் முழு அரச நிர்வாக இயந்திரமும் தோல்வியடைந்துள்ளதாக பிரேமதாச விமர்சித்தார். "நடமாடும் நூலகங்கள்" என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அரச சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இறுதியில் நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறிய அவர், இழந்த இந்த இருபத்தைந்து இலட்சம் அமெரிக்க டொலர் இழப்பிற்கான இழப்பீட்டை மீண்டும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார். திறமையற்ற அரசாங்கமாக மாறியுள்ள தற்போதைய நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினைக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், நாட்டின் இணையப் பாதுகாப்பு மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து விரைவாக நவீன முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.