2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க அவர்களினால் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பல்வேறு கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவாதங்களின் போது நிலக்கரி இறக்குமதி செயல்முறை தொடர்பாக எழுந்த கடுமையான பிரச்சினைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜனாதிபதி செயலாளர் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த பதினைந்து வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலக்கரி இறக்குமதி செயல்முறைகள் தொடர்பாகவும் முறையான விசாரணை நடத்துவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, கொஹுவளை சுரணிமல பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பிரதான அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலக வளாகத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன் பாதுகாப்புக்காக கொஹுவளை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட நான்கு அதிகாரிகளும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த நிலக்கரி நெருக்கடி குறித்து விரிவாக ஆராய்வதற்காக முழு அதிகாரங்களைக் கொண்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவடைந்த பின்னர் குறித்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. அதன் விசாரணை நடவடிக்கைகளை வழிநடத்த தற்போது சேவையில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.