ஹட்டன் மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளென்டில் தோட்டத்தில் உள்ள பெரிய நடுவத்த பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (30) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.
எஸ். புஷ்பகுமார தெரிவித்தார்.குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அதன் நிலப்பகுதியை வெட்டி சீரமைக்கும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த எதிர்பாராத விபத்து இடம்பெற்றுள்ளது. அங்கே நிலமட்டத்தைச் சீரமைத்துக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த பெரிய மண்மேடு திடீரென சரிந்து விழுந்ததால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மதகுரு மண்ணுக்குள் புதையுண்டார்.
விபத்து இடம்பெற்றவுடன் உடனடியாக செயற்பட்ட பிரதேசவாசிகளும், மீட்பு குழுவினரும் இணைந்து மண்மேட்டுக்குள் சிக்கியிருந்த மதகுருவை பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்டுள்ளனர். பின்னர் அவர் ஆபத்தான நிலையில் மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெரிய நடுவத்த தோட்டத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சேவையாற்றிய ராஜேந்திரன் கோபிநாத் (41) என்ற மதகுரு ஆவார். ஒரு பிள்ளையின் தந்தையான இவரின் மரணம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.