வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தின் மணல் முற்றத்தில் டெரகோட்டா கற்கள் பதிக்கப்பட்டதால், போதி மரத்திற்கு ஏதேனும் பாதகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விஞ்ஞான பூர்வ ஆய்வை ஆரம்பிக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் நிபுணர்களின் உதவியுடன் இந்த விரிவான விஞ்ஞான மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜய ஸ்ரீ மகா போதி மரத்தின் மேல் முற்றத்திலும் கீழ் முற்றத்திலும் உள்ள மணல் பரப்பில் டெரகோட்டா கற்கள் பதிக்கப்பட்டமை தொல்பொருள் திணைக்களத்தின் முன் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதனால், பேராதனை தாவரவியல் பூங்காவின் நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படும் விஞ்ஞான ஆய்வுகளின் போது, இந்த டெரகோட்டா கற்கள் பதித்தல் போதி மரத்தின் இருப்புக்கு பொருத்தமற்றது என உறுதிப்படுத்தப்பட்டால், அனைத்து கற்களும் உடனடியாக அகற்றப்படும் என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
இந்த நிபுணர் ஆய்வுக் குழுவை நியமிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ முன்மொழிவு தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசனைக் குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஸ்ரீ மகா போதி வளாகத்தில் பல்வேறு தூசுத் துகள்கள் மற்றும் வாகனப் புகையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விஞ்ஞான மதிப்பீட்டை மேற்கொள்ள அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அதற்கான தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் ஜய ஸ்ரீ மகா போதி மரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து இதுவரை எந்த முறையான விஞ்ஞான மதிப்பீடும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த புதிய ஆய்வுக்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட ஆய்வுக் குழுவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள விஞ்ஞான அறிக்கையின் அடிப்படையில், போதி வளாகத்தில் விளக்கு ஏற்றுதல் போன்ற மத சடங்குகளை மேற்கொள்ள வேண்டிய குறிப்பிட்ட இடங்கள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.