அனுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாராதிபதி, அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் ஒரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அதனுடன் தொடர்புடைய வழக்கில் நேற்று (22) ஆஜரானதைத் தொடர்ந்து, இந்த துஷ்பிரயோகச் செயல் சர்வதேச ஊடகங்களில் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக AP மற்றும் AFP செய்தி வலைப்பின்னல்கள் மூலம் இது பதிவானதால், உலகெங்கிலும் உள்ள சர்வதேச ஊடகங்கள் அந்த வலைப்பின்னல்களை மேற்கோள் காட்டி இந்த சம்பவத்தை உலகிற்கு அறிவித்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவற்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒரு சிரேஷ்ட பௌத்த பிக்கு வெள்ளிக்கிழமை இலங்கை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பௌத்தம் பிரதான மதமாக உள்ள இச்சமூகத்தில் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும் சூடான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் 71 வயதுடைய பல்லேகம ஹேமரத்ன தேரர் ஆவார். 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்த மாத தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டார். பிக்குவின் இந்த செயல்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயும் இதனுடன் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரான தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால், தனது உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, அவர் முழு காலத்தையும் மருத்துவமனையில் கழித்துள்ளார்." அத்தகைய சில அறிக்கைகளின் ஸ்கிரீன் ஷாட்கள் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளன.