சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவரை இன்று (22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபர் ஹேமரத்ன தேரர் சார்பில் ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் விதிக்க அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிது விக்ரமரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்போது நீதிமன்றம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதுடன், விதிக்கப்பட்டுள்ள பிணை நிபந்தனைகளை மீறினால் அல்லது சாட்சிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்தினால், விதிக்கப்பட்டுள்ள பிணை உத்தரவை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அத்தமஸ்தானாதிபதி தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 15ஆம் திகதி பிரதான நீதவான், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபர் தேரரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.