15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக கடுமையாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரர் வகித்த "நுவர கலாவியவின் பிரதான சங்கநாயக்கர்" பதவி உட்பட அனைத்து பதவிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த மல்வத்து மகா விகாரையின் காரக மகா சங்க சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மல்வத்து பிரிவின் மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து நிரந்தர தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த தடை அமுலில் இருக்கும்.
அனுராதபுரம் பிரதேசத்தில் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிறுமி தனது தாயின் சம்மதத்துடன் பணத்திற்காக பரிமாறிக்கொள்ளப்பட்டு, நீண்ட காலமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் ஹேமரத்ன தேரருக்கு எதிராக தற்போது அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேரடியாக தலையிட்டு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ அறிக்கைகள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும் குற்றம் நடந்த இடத்தின் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் கடுமையான சமூக விமர்சனத்திற்கும் சட்டரீதியான சூழலுக்கும் முகங்கொடுத்துள்ளார்.
சுமத்தப்பட்டுள்ள இந்த பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து விசேட கவனம் செலுத்திய மல்வத்து மகா விகாரையின் கௌரவ காரக மகா சங்க சபை, இதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து இது குறித்து தகவல்களை விசாரித்து விரிவான விசாரணையை நடத்தியுள்ளது. அதன் பின்னர் 2026 மே 30 ஆம் திகதி கூடிய காரக மகா சங்க சபை, சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவடையும் வரை அவருக்கு வழங்கப்பட்டிருந்த சங்கநாயக்கர் பதவியின் அனைத்து அதிகாரங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், எழுந்துள்ள இந்த விசேட சூழ்நிலையில் அட்டமஸ்தானாதிபதி பதவியின் பணிகளை தொடர்ச்சியாகவும் முறையாகவும் முன்னெடுத்துச் செல்வதற்காக அட்டமஸ்தான குழுவினால் புதிய தற்காலிக நியமனம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, காரக மகா சங்க சபையின் கட்டளைக்கு இணங்க செயற்பட்டு, வட மத்திய மாகாணத்தின் பிரதான சங்கநாயக்கரும், ருவன்வெலி சேத்தியாராமதிபதி கௌரவ ஈதலவெட்டுணவெவே ஞானதிலக்க நாயக்க தேரரை அட்டமஸ்தானாதிபதி பதவியின் பணிகளை கவனிப்பதற்காக தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மல்வத்து மகா விகாரை பிரிவின் அதி கௌரவ ஸ்ரீமத் மகாநாயக்க தேரரின் நேரடி உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட இந்த உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைக்கு மல்வத்து விகாரையின் பதிவாளர் கௌரவ பஹமுனே தர்மகீர்த்தி ஸ்ரீ சரணங்கர சுமங்கல நாயக்க தேரர் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.