வட கொழும்பு ராகம போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் ஒரு சட்ட மருத்துவ அதிகாரி, பதினாறு வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வெலிசரை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பமுணுகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த வைத்தியர் கடந்த 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சட்ட வைத்தியர் மீரிகம, பெம்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இந்த பாலியல் துஷ்பிரயோகத்தை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் பதினாறு வயது மாணவனை மருத்துவ பரிசோதனைக்காகவும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவனிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். அப்போது வெளிப்பட்ட சாட்சியங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்றமை மற்றும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேதவத்த அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழும், மேல் மாகாண வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி காலிங்க ஜயசிங்க அவர்களின் அறிவுறுத்தல்களின் படியும் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிமல் பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ், பமுணுகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இமக சஞ்சீவ அவர்களின் தலைமையில் இயங்கும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பமுணுகம பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.