கோட்டாபயவின் மனுக்கள் விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த விலகினார்

court-of-appeal-judge-priyantha-withdraws-from-gotas-petition-hearing

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக 'சேனல் 4' தொலைக்காட்சி வெளிப்படுத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதையோ அல்லது தடுப்புக் காவலில் வைப்பதையோ தடுக்கும் ரிட் உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ விலகியுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு முதன்முதலில் பரிசீலிக்கப்பட்டபோது, நீதிபதி இதை அறிவித்தார்.

அதன்படி, இந்த மனு இன்று (18) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய புதிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.




சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான், தான் இலங்கையை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் மூலம் அறிய வந்ததாக முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழ்நிலையில், 'சேனல் 4' தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எந்த நேரத்திலும் தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கும் கடுமையான ஆபத்து இருப்பதாக மனுதாரர் கூறுகிறார்.

தற்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் போலியான சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் என்றும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவும் அவருக்கு எதிராகப் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார். இத்தகைய பின்னணியில் அவரிடமிருந்து நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை எதிர்பார்க்க முடியாது என்றும், தான் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், எந்தவொரு கைது நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய செயல் இயற்கை நீதிக் கோட்பாடுகளை மீறி தனது தனிப்பட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டுகிறார்.




இந்த காரணத்தினால், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் ரிட் உத்தரவையும், மனு விசாரணை முடிவடையும் வரை நடைமுறையில் இருக்கும் இடைக்காலத் தடை உத்தரவையும் பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். மேலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்திற்கு அழைக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுதாரர் சார்பாக சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி மற்றும் ரொமேஷ் டி சில்வா ஆகியோர் ஆஜராகினர், பிரதிவாதிகள் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத் ஆஜரானார்.

Post a Comment

Previous Post Next Post